Published : 16 Oct 2025 03:25 PM
Last Updated : 16 Oct 2025 03:25 PM
சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பெருநகர சென்னை மாநகராட்சியில் 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப் பணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, ”ஐடிபிஐ” (IDBI) வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக் காக 23 எண்ணிக்கையில் நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில், மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் தலா ரூ.10.43 லட்சம் என மொத்தம் ரூ.52.17 லட்சம் மதிப்பீட்டிலான 5 நாய் பிடிக்கும் வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது.
இந்நிகழ்வில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், இணை ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT