Published : 14 Oct 2025 07:02 AM
Last Updated : 14 Oct 2025 07:02 AM
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். அதை எப்போதும் மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரான ஒன்றாக பார்க்கிறேன். எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை உள்ளது. எல்லோருமே மாநில உரிமை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சிபிஐ துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் இரண்டு மூளைகள் இருக்கின்றதா? சிபிஐ விசாரணையில் அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது. இவ்வளவு சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள். விசாரணை தொடங்குவதற்குள் ஏன் சிபிஐ விசாரணை போட வேண்டும்.
சிபிஐ நாளையில் இருந்து விசாரணையை தொடங்கி, அடுத்த இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்துவிடுவார்களா. அவர்கள் புலன் விசாரணையை விட, எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘புலன் விசாரணை’ படம் நன்றாக இருக்கும். அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணையை விஜய் கட்சியினர் வேண்டாம் என்கிறார்கள். சிறுநீரக திருட்டிற்கு நீதிமன்றம் போட்ட விசாரணையை அரசு வேண்டாம் என்கிறது. எப்படிப்பட்ட ஆட்சி முறை நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். நேர்மையாளனுக்கு என்ன பயம். யார் விசாரித்தால் என்ன. இவர்களை போன்ற கேடு கெட்ட கூட்டத்தை பார்க்க முடியாது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT