Published : 13 Oct 2025 08:01 AM
Last Updated : 13 Oct 2025 08:01 AM
தேர்தலுக்கு தேர்தல் திண்டுக்கல் மக்கள் தோல்வியையே பரிசாக தந்தாலும் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலான திண்டுக்கல் மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிக்கொடி நாட்டி தனது ஆளுகை எல்லையை விரிவுபடுத்த விடாமுயற்சியுடன் போராடும் பாமக, இம்முறையும் அதற்கான திட்டத்துடன் இருக்கிறது.
வட மாவட்டங்களுக்குள் சுருங்கிவிட்ட கட்சி என்ற இமேஜை உடைத்து தென் மாவட்டங்களிலும் தடம் பதிக்க நீண்ட நாட்களாகவே போராடி வருகிறது பாமக. அதற்காவே மாநில பொருளாளர் பதவியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திலகபாமாவுக்குக் கொடுத்தது. இந்து வன்னியர்களும் கிறிஸ்தவ வன்னியர்களும் பரவலாக வசிக்கும் திண்டுக்கல் பகுதி தான் பாமக-வின் குறி.
2011-ல் திமுக கூட்டணியில் இருந்த பாமக, திண்டுக்கல் தொகுதியில் பால்பாஸ்கரை நிறுத்தியது. இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளர் பாலபாரதி போட்டியிட்டார். இரண்டு திராவிடக் கட்சிகளும் நேரடியாக போட்டியிடாத போதும் அந்தத் தேர்தலில் பாமக தோற்றுப் போனது.
தோற்றாலும் தளராத பாமக, 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டது. ஆனால், அப்போது பாமக சார்பில் நிறுத்தப்பட்ட ஜோதிமுத்து, திமுக-வின் அறிமுக வேட்பாளர் வேலுச்சாமியிடம் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனாலும் தளரவில்லை பாமக தலைவர்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியுடன் சந்தித்த பாமக, கட்சியின் பொருளாளர் திலகபாமாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் அப்போதைய முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியை எதிர்த்து திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தைரியமாக நிறுத்தியது. அந்தத் தேர்தலில், திலகபாமா சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அதிமுக ஓட்டுகளே அந்தத் தேர்தலில் ஐ.பெரியசாமியின் ‘பெட்டிக்கு’ திரும்பிய அதிசயமும் நடந்தது.
ஆத்தூரில் ஆக மோசமாக தோற்றாலும் களங்காத பாமக, 2024 மக்களவைத் தேர்தலிலும் திண்டுக்கல்லை விடவில்லை. அப்போது பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, மீண்டும் திலகபாமாவையே திண்டுக்கல் வேட்பாளராக நிறுத்தியது. அப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட திலகபாமா சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். 2016-ல் தமிழகம் முழுவதும் பாமக தனித்துப் போட்டியிட்ட போது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தொகுதிகளில் சுமார் 2,000 ஆயிரம் வாக்குகளை பெற்றது பாமக. அதேசமயம் ஆத்தூரில் பாஜக-வை விட பின்தங்கிப் போனது.
இம்முறையும் வெற்றிக் கூட்டணிக் கனவுகளோடு காத்திருக்கும் பாமக, திண்டுக்கல் மாவட்டத்தில் தடம்பதிக்க வேண்டும் என்பதிலும் விடாமுயற்சியுடன் இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாமக தலைவர் திருப்பதி, “தென் மாவட்டங்களுக்கான நுழைவு வாயில் என்பதால் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் வெற்றிக் கணக்கைத் தொடங்க விடாமல் முயற்சிக்கிறோம்.
அதே நம்பிக்கையுடன் தான் கடந்த வாரம் இந்த மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார் தலைவர் அன்புமணி. முந்தைய தேர்தல் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் இம்முறையும் திண்டுக்கல் மாவட்டத்தில் நாம் போட்டியிட்டே ஆகவேண்டும் என்ற கருத்தை அவரிடம் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT