Published : 11 Oct 2025 07:16 AM
Last Updated : 11 Oct 2025 07:16 AM
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை வரும் 16 முதல் 18-ம் தேதிகளில் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேநேரத்தில், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைக் காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக். 11) பெரும்பாலான இடங்களிலும், வரும் 12 முதல் 16-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை யொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT