Published : 10 Oct 2025 04:55 PM
Last Updated : 10 Oct 2025 04:55 PM
சென்னை: உயர் நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘உயர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.
அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளை சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திட வேண்டுமென கோருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதின்றம் அருகே வழக்கறிஞர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது திருமாவளவன் சென்ற கார் மோதுவதுபோல் சென்றுள்ளது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், அவரது வாகனத்தை நிறுத்திவிட்டு, ஏன் இப்படி காரை அஜாக்கிரதையாக ஓட்டி வருகிறீர்கள் என கண்டித்துள்ளார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் தகராறு, கைகலப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே ஊடகங்களில் திருமாவளவன் விளக்கமளித்தார். இந்நிலையில், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் உயர் நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT