Published : 09 Oct 2025 06:01 AM
Last Updated : 09 Oct 2025 06:01 AM
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில், அவரது வழக்கறிஞர் யாஷ் எஸ்.விஜய் தாக்கல் செய்துள்ள மனு: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களுக்கு தவெக சார்பிலும், கட்சி தொண்டர்கள் சார்பிலும் அவசர, மருத்துவ உதவிகள் தாமதமின்றி உடனடியாக வழங்கப்பட்டன.
நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களை கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை.
தமிழக போலீஸாரின் செயல்பாடு குறித்து அதி ருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அவர்களைக் கொண்டே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்திருப்பது தவெகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிலர் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய சதியின் விளைவாகவே உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உண்மைகளை வெளியே கொண்டுவர சுதந்திரமான விசாரணை தேவை.
எனவே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT