Published : 08 Oct 2025 02:12 PM
Last Updated : 08 Oct 2025 02:12 PM
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் இன்று (அக்.8) மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் மட்டும் கரூர் செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விஜய்யும், அவரது கட்சியினரும் தொண்டர்களை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிவிட்டதாக நீதிபதியும் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிபியிடம் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், “தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்கு அனுமதி கேட்டும், அவருக்கு உரிய பாதுகாப்பு கேட்டும் காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார். ஆனால், எப்போது விஜய் கரூர் செல்லவுள்ளார் என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, இன்று காலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ், “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள். தொடர்ந்து போராடுங்கள். என்று ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகள் குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT