Published : 08 Oct 2025 06:22 AM
Last Updated : 08 Oct 2025 06:22 AM
சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சென்னை, சேலம், ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்பட 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 700-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. இங்கு விற்பனையாகும் ஆடைகளுக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, சென்னையில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடு, அலுவலகங்கள், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உட்பட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகள் என 30 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "சோதனை முழுமையாக முடிந்த பின்னரே, அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் வெளியிடப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT