Published : 08 Oct 2025 05:41 AM
Last Updated : 08 Oct 2025 05:41 AM
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் கட்சித் தலைவர் விஜய் வீடியோகால் மூலம் பேசியுள்ளார். மேலும், விரைவில் கரூர் வருவதாக அவர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் மட்டும் கரூர் செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விஜய்யும், அவரது கட்சியினரும் தொண்டர்களை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிவிட்டதாக நீதிபதி குற்றம்சாட்டினார். இதையடுத்து, கடந்த 3, 4-ம் தேதிகளில் உள்ளூர் தவெக நிர்வாகிகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்தாஸ் தலைமையிலான கட்சியினர் நேற்று முன்தினம் கரூர் வந்தனர். அவர்கள் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து, செல்போன் மூலம் வீடியோகாலில் அழைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய்யை பேச வைத்தனர்.
தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் வீடியோகால் மூலம் விஜய் ஆறுதல் தெரிவித்தார். கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த தனுஷ்குமாரின் (24) தங்கை ஹர்ஷினியிடம் பேசிய விஜய், “அண்ணன் இருக்கிறேன்.
உங்களை பார்க்க சீக்கிரமா வர்றேன்” என்று கூறியுள்ளார். ஏமூர்புதூரில் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகாவை இழந்த டாஸ்மாக் ஊழியர் சக்திவேலிடம் வீடியோகாலில் பேசிய விஜய், “இந்த சம்பவம் ஈடுசெய்ய முடியாத இழப்பு, துக்கம் தாங்க முடியவில்லை. விரைவில் சந்திக்கிறேன்” என்று பேசியுள்ளார். இதேபோல, கரூரில் உயிரிழந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் பேசியுள்ளார்.
அப்போது, வீடியோ காலில் பேசுவதை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மேலும் பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரிடம் விஜய் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT