Published : 07 Oct 2025 12:20 PM
Last Updated : 07 Oct 2025 12:20 PM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிட தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரம், சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்துக்கு இந்த சந்திப்பின்போது முறைப்படியாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தில் இபிஎஸ் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பாஜக தேசிய துணை தலைவரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான, நாடாளுமன்ற உறுப்பினர், பைஜெயந்த் பாண்டாவுடன் சந்தித்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT