Published : 07 Oct 2025 06:33 AM
Last Updated : 07 Oct 2025 06:33 AM

தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ - நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்

உள்படம்: நீதிபதி செந்தில்குமார்

சென்னை: ‘வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள், அவர்களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர், எதை​யும் சிரித்​துக்​கொண்டே கடந்​து​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் ஆதங்​கம் தெரி​வித்​துள்​ளார்.

பிரபல சமையல் கலைஞ​ரான மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி ஏமாற்​றி​விட்​ட​தாக, கர்ப்பிணி​யான ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். மாதம்​பட்டி ரங்​க​ராஜைக் கடுமையாக விமர்​சித்து சமூக வலை​தளங்​களி​லும் அவர் பதி​விட்டு இருந்​தார்.

இந்​நிலை​யில் தன்​னைப் பற்றி சமூக வலை​தளங்​களி்ல் பதி​விட, பேட்​டியளிக்க தடை விதிக்​கக் கோரி​யும், ஏற்​கெனவே வெளியிடப்​பட்​டுள்ள வீடியோக்​களை அகற்​றக் கோரி​யும் மாதம்​பட்டி ரங்​க​ராஜ், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் முன்​பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன், “மாதம்​பட்டி ரங்​க​ராஜுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்​பவருடன் திரு​மண​மாகி 2 மகன்​கள் உள்​ளனர். ஆடை வடிவ​மைப்​பாள​ரான ஜாய் கிரிசில்​டாவுக்கு இந்த உண்​மை​கள் அனைத்​தும் தெரி​யும்.

தெரிந்​து​தான் ரங்​க​ராஜுடன் அவர் பழகி வந்​துள்​ளார். இப்​போது தொழில்​ ரீ​தி​யாக பிரச்​சினை ஏற்​பட்​டதும் ரங்​க​ராஜ் தன்னை ஏமாற்றி விட்​ட​தாகக்​கூறி 100-க்​கும் மேற்​பட்ட யூடியூப் சேனல்​களுக்கு பேட்​டியளித்து அவதூறு பரப்பி வரு​கிறார். இதனால் மாதம்​பட்டி ரங்​க​ராஜின் தனிமனித ஆளுமை உரிமை​கள் பாதிக்​கப்​பட்​டு, நற்​பெயருக்​கும் களங்​கம் ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

பதி​லுக்கு ஜாய் கிரிசில்டா தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ்​.பிர​பாகரன், இந்த வழக்​கில் தனக்​காக நியா​யம் கேட்டு ஜாய் கிரிசில்டா சட்​டப்​போ​ராட்​டம் நடத்தி வரு​வ​தாக​வும், இதில் பதில்​மனு தாக்​கல் செய்​வ​தாக​வும் கூறினார். அப்​போது நீதிப​தி, “ஒரு வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள் மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர்.

இஷ்டம்​போல எதிர்​மறை​யான விஷ​யங்​களை​யும், பழைய சம்​பவங்​களை​யும் தேடிப்​பிடித்து கலர்​சா​யம் பூசி சமூக வலைதளங்களில் பதி​விடு​கின்​றனர். எதை​யும் கண்​டு ​கொள்​ளாமல் சிரித்​துக்​கொண்டே கடக்க வேண்​டும். சமூகத்​தில் யார் மீதும் குற்றம்​ சாட்​டு​வது இயல்​பாகி விட்​டது” என ஆதங்​கம் தெரி​வித்​தார். பின்​னர் மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தொடர்​பான வழக்​கில் எதிர்​மனு​தா​ரர் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை அக்​.22-க்கு தள்ளிவைத்​துள்​ளார்.

அப்​போது நீதி​மன்​றத்​தில் இருந்த மூத்த வழக்​கறிஞர்​களான ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், எஸ்​.பிர​பாகரன் மற்​றும் வழக்​கறிஞரும், காங்​கிரஸ் எம்​.பி.​யு​மானசுதா ஆகியோர், உங்​களுக்கு நாங்​கள் துணை​யாக இருப்​போம் என நீதிப​திக்கு ஆதரவு தெரி​வித்​தனர். நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் கடந்த சில தினங்​களுக்கு முன்​பு, கரூர் சம்​பவம் தொடர்​பான வழக்கு விசா​ரணை​யின்​போது தவெக தலை​வர் விஜய்யை கடுமை​யாக விமர்​சித்து கருத்து தெரி​வித்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x