Published : 05 Oct 2025 08:38 AM
Last Updated : 05 Oct 2025 08:38 AM
தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரூர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புடனும், நிதானமாகவும் செயல்பட்டு வருகிறார். யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வருக்கு இல்லை என்று தெரிகிறது. 41 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. ஆனால், விஜய் கைது செய்யப்படவில்லை.
நான் அரசுக்கு ஆதரவாகப் பேசவில்லை. நடுநிலையாகப் பார்க்கும்போது, எல்லாம் சரியாக தான் நடக்கிறது. தவெகவும் திட்டமிட்டு செய்யவில்லை. நிர்வாகிகளுக்கு அனுபவம் குறைவு என்பதால் விபத்து நடந்துள்ளது.
விஜய் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருந்தால், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்காது. ஆனால், தங்களின் மீது பழி வந்துவிடும் என ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அமைதியாக இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். இவ்விவகாரத்தில் பல தலைவர்கள் நிதானமாக பேசினார்கள். ஆனால், எம்.பி.க்கள் குழு அமைத்து, பழனிசாமிக்கு நிகராக பாஜக அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தின்போது இதுபோன்று எந்தக் குழுவும் வரவில்லை.
இதை வருங்காலத்துக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விஜய் அரசியலுக்குப் புதியவர். அவரைச் சுற்றி இருப்பவர்களும் அரசியல் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பதால், இதுபோன்ற தவறு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT