Published : 05 Oct 2025 08:32 AM
Last Updated : 05 Oct 2025 08:32 AM
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நேற்று ஒப்படைத்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார்.
இவ்வழக்கில் முதலில் விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் எஸ்.பி.க்கள் சியாமளா தேவி, விமலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த குழுவில் சேர்க்கப்பட உள்ளனர்.
இதையடுத்து, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் கரூரில் இருந்து நேற்று சென்னை சென்று, ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT