Published : 04 Oct 2025 12:16 PM
Last Updated : 04 Oct 2025 12:16 PM
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர், அமைச்சர்களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை (அக்., 4) திருவான்மியூரில் உள்ள தமிழக முன்னாள் டிஜிபி நட்ராஜ், மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி வீடு ஆகிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, ஆளுநர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, விமான நிலையம் உட்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர், குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT