Published : 03 Oct 2025 04:20 PM
Last Updated : 03 Oct 2025 04:20 PM
கரூர்: 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 116 காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த பல்வேறு கட்சியினர் பார்வையிட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன் (கேரளா), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, எம்எல்ஏ நாகைமாலி கொண்ட குழுவினர் இன்று (அக்.3) கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் ஆறுதல் கூறினர். தொடர்ந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த 2 வயதான சிறுவன் துருவிஷ்ணு குடும்பத்தினர் மற்றும் கரூர் ஏமூர்புதூர் பகுதியில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழு ஆறுதல் கூறினர்.
கரூர் ஏமூர்புதூரில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியது: “கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்டம் நடந்த இடத்தையும், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுபவரையும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சந்தித்தோம். கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் 14 வயது மகன் சக்திவேல் பள்ளி செல்லாமல் உள்ளார். தீமையில் ஒரு நன்மை என்பதுபோல அவரை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மீண்டும் வந்து சக்திவேலை சந்திப்போம்.
இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது. இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகாமல் கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்டு உரிய சிகிக்சை வழங்கி முதல்வர் இரவோடு இரவாக நேரில் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதுபோல சம்பவங்கள் எங்கும் நடைபெறக் கூடாது. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ கட்சியினர் தவறிவிட்டனர். 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் தண்ணீரோ, உண்ணவோ எதுவுமின்றி சோர்வடைந்துள்ளனர். இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை.
கூட்டத்தை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சம்பவம் நடந்த 3 மணி நேரம் கழித்து ட்வீட் செய்து, 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக முடியாது. ஒரு துயர சம்பவம் நடந்திருக்கும்போது அங்கு சென்று உதவியிருக்க வேண்டும்.
யார் மீதும் குற்றம் சுமத்துவது? தண்டனை வழங்குவது நோக்கமல்ல. எதிர்காலத்தில் இதுபோல நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது” என்று எம்.ஏ.பேபி கூறினார்.
அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி கூறியது: ”இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளோ, போராட்டங்களோ நடைபெறதா வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விடக்கூடாது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும்” என்று வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT