Published : 03 Oct 2025 05:27 AM
Last Updated : 03 Oct 2025 05:27 AM

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடா? - ‘ஒய்’ பிரிவிடம் விளக்கம் கேட்கிறது மத்திய உள்துறை

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கை அடிப்படையில், எஸ்பிஜி, இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என பல்வேறு வகையான பிரிவுகளின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது.

அந்த வகையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் வரையிலான போலீஸார் மற்றும் கமாண்டோக்கள் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் சம்பவம்: இந்த நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், விஜய் மீது காலணி வீசப்பட்டதாக காணொளியும் வெளியானது. இதனால், விஜய் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, விஜய்யின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. விஜய்க்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? குறிப்பாக கரூர் பிரச்சாரக் கூட்டத்தின்போது எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? அப்போது விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டதா? என்று பல கேள்விகளை உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது.

இதற்கு ‘ஒய்’ பிரிவு அதிகாரிகள் அளிக்கும் பதில் அடிப்படையில், விஜய்க்கான பாதுகாப்பு போதுமா அல்லது அதிகரிக்கப்பட வேண்டுமா என்று முடிவெடுக்கப்படும். பாதுகாப்பில் குறைபாடு இருப்பது தெரியவந்தால், விஜய்க்கான பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x