Published : 30 Sep 2025 06:30 AM
Last Updated : 30 Sep 2025 06:30 AM
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து அக்.5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் - செங்கோட்டை தாம்பரத்தில் இருந்து இன்று (30-ம் தேதி) மாலை 4.15 மணிக்கு முன்பதிவில்லா அதிவிரைவு சிறப்பு ரயில் (06013) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 11.45 மணிக்கு மெமு விரைவுசிறப்பு ரயில் (06161) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இதுதவிர, யஸ்வந்த்பூர் - மங்களூரு சந்திப்பு இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவும், சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு நிலையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. மற்ற இரண்டு சிறப்பு ரயில்கள் முன்பதிவில்லாத ரயில்கள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT