Published : 28 Sep 2025 09:38 PM
Last Updated : 28 Sep 2025 09:38 PM
சென்னை: உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் முறையிட்ட தவெக தரப்பு, ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் என்பது விபத்து போல தெரியவில்லை; திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். ஒருபக்கம் பெருந்துயராக சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம், மறுபக்கம் அரசியல் ரீதியில் பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்தப் பின்னணியில், உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியான தண்டபாணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
அப்போது, ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் என்பது விபத்து போல தெரியவில்லை. அது, திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. பிரச்சாரம் நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.
எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று நீதிபதியிடம் தவெக வழக்கறிஞர் அறிவழகன், கட்சியின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முறையிட்டனர்.
அதற்கு நீதிபதி தண்டபாணி, ‘இது குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அத்துடன், நீதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திங்கள்கிழமை மனு தாக்கப்படும் எனத் தெரிகிறது.
நீதிபதி உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளோம். நாளை பிற்பகல் 2.15 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விரிவாக பேசவேண்டாம். நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின்னர் இது குறித்து எங்கள் கருத்தை தெரிவிப்போம்” என்றார்.
அப்போது, தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT