Published : 28 Sep 2025 03:01 AM
Last Updated : 28 Sep 2025 03:01 AM

கரூர் கூட்ட நெரிசல்: ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் மரணம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் கருர் அருகே ஏமூர் என்ற ஊரை சேர்ந்தவர்கள்; அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கருர் அருகே ஏமூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹேமலதா (28), மகள்கள் சாய் லக்‌ஷனா (9), சாய் ஜீவா (5) உயிரிழந்துள்ளனர். மேலும், ஏமூரை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்தி என்பவரின் மனைவி பிரியா, இவர்களது மகள் தரணிகா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கரூரில் ஓரே ஊரை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் விவரம்: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இறந்தவர்கள் 39 பேர். இவர்களில் கரூரை சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோட்டை சேர்ந்தவர்கள் 2 பேர், திருப்பூரை சேர்ந்தவர்கள் 2 பேர், திண்டுக்கலை சேர்ந்தவர்கள் 2 பேர், சேலத்தை சேர்ந்தவர் ஒருவர். அடையாளம் தெரியாதவர்கள் 4 பேர் என மொத்தமாக 39 பேர் இறந்ததாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை அறிவித்துள்ளது.

மேலும், மொத்தமாக 111 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேர், அக்‌ஷயா, அப்பலோ, அமராவதி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் என மொத்தமாக 111 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவனை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனை: இந்தத் துயரச் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு, உறவினர்களை வரவழைத்து உடலை கண்டறிந்து, பிரேத பரிசோதனை நடைபெற்றது.

உயிரிழந்தவர்களில் 35 பேரின் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்களை உறவினர்களுக்கு ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இறந்தவர்களில் 4 பேரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலையில் முதல்வர் ஆறுதல்: உயிரிழந்த 39 பேர்களில் உடல்கள், பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 35 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனை இரவோடு இரவாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் பிரேத பரிசோதனை கூடத்துக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன், பெரிய கருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, சிவசங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் எம்பி ஜோதிமணி உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x