Published : 26 Sep 2025 07:10 AM
Last Updated : 26 Sep 2025 07:10 AM
விழுப்புரம்: திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் உட்பட 6 பேர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி இருந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த 6 பேரில் சி.வி.சண்முகமும் ஒருவர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசிக்கும் சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “அதிமுக-பாஜக கூட்டணி கூட்டணியில் முக்கியக்கட்சி என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து, இணக்கமான சூழலை ஏற்படுத்துமாறு நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைப்பது, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து கூட்டணியில் பங்கேற்கச் செய்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கலாம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT