Published : 23 Sep 2025 10:56 AM
Last Updated : 23 Sep 2025 10:56 AM
சென்னை: தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமாரின் மாமியாரும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் மறைவையடுத்து சென்னையில் உள்ள அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘டிடிவி தினகரன் 2024 முதல் எங்கள் கூட்டணியில் இருந்தார். அவர் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அவர் ஒரு மாத காலம் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், இப்போது சென்னை வந்ததும் அவரை நேரில் சந்தித்தேன்.
இந்தச் சந்திப்பின்போது, திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவேண்டும் என அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். எனவே அவர் நவம்பரில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தையும் நான் சந்திக்கவுள்ளேன்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறேன். ஏற்கெனவே, திமுக குடும்பத்தின் ஆடிட்டரை துபாய்க்கு செல்லும்போது முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் சென்றார். அதன் அடிப்படையில்தான் இப்போது விஜய் குற்றம்சாட்டுகிறார். தங்கள் மேல் குற்றம் இல்லையென்றால் முதல்வர் தரப்பு வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்காகவே வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகளை செய்கின்றன. இதனை மறைத்து வெளிநாடுகளில் சென்று முதல்வர் ஸ்டாலின் போட்டோ எடுக்கிறார். கருணாநிதியை துரோகி, மோசக்காரன் என சபாநாயகர் அப்பாவு கடந்த காலங்களில் பேசினார், இப்போது அவர் திமுகவில் உள்ளார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். எனவே அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வரிகள் இருந்தன. இதனால் முதன் முறையாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது 4 அடுக்கு தேவைப்பட்டது. இப்போது அதனை இரு அடுக்குகளாக குறைத்துள்ளோம்” என்றார்.
நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “ தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்” என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT