Published : 18 Sep 2025 04:48 PM
Last Updated : 18 Sep 2025 04:48 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.19) ஒருசில இடங்களிலும், 20-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் செப்.22-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 8 செமீ, திருப்பூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 7 செமீ, காரைக்கால், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னலில் தலா 6 செமீ, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, வேலூர் மாவட்டம் குடியாத்தம், தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், சேலம் மாவட்டம் ஏற்காடு, டேனிஷ்பேட்டை, புதுச்சேரி பத்துக்கண்ணு, , மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழி, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x