Published : 17 Sep 2025 08:22 PM
Last Updated : 17 Sep 2025 08:22 PM
விழுப்புரம்: பாமகவில் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது பரஸ்பர பலத்தை நிரூபிக்க தலா 100 கார்களில் புடைசூழ பவனி வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் இன்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இணைந்து திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் மற்றும் சித்தனி, பார்ப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், கொள்ளுகாரன்குட்டை ஆகிய கிராமங்களில் உள்ள இடஒதுக்கீடு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பின்னர் வயது மூப்பு காரணமாக, திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துடன், அஞ்சலி செலுத்துவதை ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திக் கொண்டார். அன்புமணி மட்டும் தொடர் பயணம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பாமகவை தக்க வைத்துக்கொள்ள ராமதாஸும், பாமகவை கைப்பற்ற அன்புமணியும் கடந்த 9 மாதங்களாக மாபெரும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, பாட்டாளி சொந்தங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ராமதாஸ் இறங்கி உள்ளார். இதன் விளைவாக, தைலாபுரத்தில் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த நிறுவனர் ராமதாஸ், பின்னர், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு, சித்தணி முதல் கொள்ளுகாரன்குட்டை வரை உள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார். அவருடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல் திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, 21 தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் இவரும், சித்தணி முதல் கொள்ளுக்காரன்குட்டை வரை உள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதற்கிடையில், விழுப்புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு: பாமகவில் அதிகாரத்தை கைப்பற்ற இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலில், பரபஸ்பர பலத்தை நிருபிக்க தலா 100 கார்களில் தந்தையும், மகனும் அணிவகுத்தனர். நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு இளைஞர்கள் சென்றனர். இதன் எதிரொலியாக, விக்கிரவாண்டி - பண்ருட்டி இடையே தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் கோலியனூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் தொலைதூர பயணிகள் அவதிப்பட்டனர்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறிய நிறுவனர் ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவோம். பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றார். திண்டிவனத்தில் பேசிய அன்புமணி, ‘வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசு, சமூக நீதிக்கு எதிரான துரோகி. திமுகவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT