Published : 17 Sep 2025 06:14 PM
Last Updated : 17 Sep 2025 06:14 PM
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குனர் விகாஸ் குமாரை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெ.நிஷா பானு, எஸ்.சவுந்தர், அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், பதில் மனு தாக்கல் செய்யாததற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த அமர்வு முன்பே இந்த வழக்கை பட்டியலிட வேண்டுமென வாதிட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT