Published : 17 Sep 2025 04:39 PM
Last Updated : 17 Sep 2025 04:39 PM
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.18) பெரும்பாலான இடங்களிலும், செப்.19-ம் தேதி ஒரு சில இடங்களிலும், செப்.20 முதல் செப்.22-ம் தேதி வரை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், செப்.23-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (செப்.18-ம் தேதி) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என மொத்தம் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (செப்.19-ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் செப்.20-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ மழை, சென்னை மணலி புதுநகரில் 13 செ.மீ மழை, குருவாடியில் 10 செ.மீ மழை, சென்னை எண்ணூர், கொரட்டூர், பாரி முனையில் தலா 9 செ.மீ மழை, சென்னை டிஜிபி அலுவலகம், கத்திவாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் தலா 8 செ.மீ மழை, சேலம் மாவட்டம் கங்கவல்லி, சென்னை அயப்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT