Published : 17 Sep 2025 11:13 AM
Last Updated : 17 Sep 2025 11:13 AM
விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் கூறவில்லை. பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில் பிஹார், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் முகவரி ‘தலைவர், பாமக, எண் - 10, திலக் தெரு, தி.நகர், சென்னை - 17’ என உள்ளது. பாமக அலுவலக முகவரி மாற்றம் ராமதாஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் நிரந்தர முகவரி ‘63 நாட்டுமுத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை, சென்னை’ என்பதுதான். சூழ்ச்சியால் பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது பாமக தலைவருக்குத்தான். ஆனால், தேனாம்பேட்டைக்கு கடிதம் போகாமல், திலக் தெருவுக்கு சென்றுள்ளது.
மாமல்லபுரத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை பதிவு செய்து கொள்கிறோம் என தேர்தல் ஆணையம் மற்றொரு கடிதத்தில் தெரிவித்துள்ளது. பாமக தலைவராக 28-05-22-ல் பொறுப்பேற்ற அன்புமணியின் பதவிக் காலம் கடந்த 28-05-25-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தலைவர் பதவியில் இல்லாதவர் மாமல்லபுரத்தில் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்? அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது.
கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ்தான். இதை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு அங்கீகரித்துள்ளது. பாமக தலைவர் என்றுதான் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தலைவருக்குதான் பாமகவின் மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ராமதாஸ்தான் தலைவர். முகவரி மாற்றம்தான் மோசடிக்கு முக்கியக் காரணம். மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் ராமதாஸுக்கு சொந்தமானது. இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு நடத்திய நாடகத்தை யாரும் நம்ப மாட்டர்கள்.
யார் வேண்டும் என்றாலும் தலைவர் என்று சொல்லிக் கொள்ளலாம். கட்சியை தொடங்கியவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும். பாமகவில் தொடர வேண்டும் என்று கருதினால், ராமதாஸுடன் இணைந்து பயணிப்பதுதான் நல்லது. பாமகவை பிளவுபடுத்தும் முயற்சி பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT