Published : 17 Sep 2025 05:49 AM
Last Updated : 17 Sep 2025 05:49 AM
சென்னை: காஞ்சிபுரம், மதுரை, சேலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.17, 18), பெரும்பாலான இடங்களிலும், 19-ம் தேதி சில இடங்களிலும், 20 முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், 19-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று மணிக்கு அதிகபட்சம் 60 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், சைதாப்பேட்டையில் 12 செ.மீ., கண்ணகி நகர், வேலூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT