Published : 16 Sep 2025 05:38 AM
Last Updated : 16 Sep 2025 05:38 AM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (செப்.16) டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குரல் கொடுத்து வந்தார். கடந்த செப்.5-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்திய செங்கோட்டையன், பழனிசாமிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதற்கிடையில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து பழனிசாமியும் இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்குவதும், சந்திப்பதும் பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாகவும், கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி கட்சிகள் இணைந்து மக்களை சந்திப்பது, இதர கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், விஜய் கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து, அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துவதற்காக பழனிசாமி டெல்லி செல்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ற முறையில் பழனிசாமியும், அமித் ஷாவும் சந்திப்பது இயல்பானது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT