Published : 13 Sep 2025 04:52 PM
Last Updated : 13 Sep 2025 04:52 PM
சென்னை: தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கருக்கு கடந்து செல்லக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.14) மற்றும் நாளை மறுதினம் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 19-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 17-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 18-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், 19-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 17-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுச்சேரியில் 8 செமீ, விழுப்புரத்தில் 7 செமீ, விழுப்புரம் வளவனூரில் 6 செமீ, புதுச்சேரி பத்துக்கண்ணில் 5 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், புதுச்சேரி திருக்கனூர், கடலூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது’
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT