Published : 11 Sep 2025 04:18 PM
Last Updated : 11 Sep 2025 04:18 PM
மதுரை: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை திமுக வெற்றி உறுதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லியிருந்தாலும்; உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: ‘கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேவர் திருமகனாரின் பெயர் மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் எனவும் தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் தென் தமிழக மக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அமமுக தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லி இருக்கிறோம்.
கடந்த தேர்தலுக்கு முன்பு பழனிசாமி, 2021 சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதத்தை அறிவித்ததால் தென் தமிழத்தில் உள்ள வாழ்கின்ற 105 சமூக மக்கள் பொங்கி எழுகின்ற சூழ்நிலை உருவானது. அந்த கருத்துக்களின் அடிப்படையில் விமானநிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை வைப்பதற்கு பழனிசாமி கோரிக்கை வைத்திருப்பதற்கு பொதுவான கருத்து ஒன்றை சொன்னேன். ஆனால், நான் சொன்னதை ஏதோ பழனிசாமி சொன்னதற்கு எதிர்த்து சொன்னதாக, அரசியலுக்காக சொன்னதாக சிலர் தவறாக புரிந்து கொண்டு தூண்டப்படுகிறார்கள்.
இன்றைக்கும் சொல்கிறேன், அமமுக எல்லா சமுதாயங்களுக்கும் பொதுவான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. நயினார் நாகேந்திரன் நல்ல நண்பராக என்றைக்கு வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார். எங்களது வெற்றியின் ரகசியமே பழனிசாமி தான் என்றும், அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக நீடித்தால் எங்கள் வெற்றி சுலபம், அவர் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறவர்கள், இதனை புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதி ஸ்டாலின், வஞ்சப்புகழ்ச்சியாகவோ சொல்லியிருந்தாலும் உண்மையைதான் சொல்லி இருக்கிறார். தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கான கூட்டணியை நாங்கள் முடிவு செய்வோம். சுதந்திரமாக அமமுக செயல்படும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT