Last Updated : 11 Sep, 2025 10:08 AM

2  

Published : 11 Sep 2025 10:08 AM
Last Updated : 11 Sep 2025 10:08 AM

கோமாவில் கோவை காங்கிரஸ்? - மாவட்டத் தலைவர்களை கூண்டோடு மாற்றியதன் பின்னணி!

வி.எம்.சி.மனோகரன், கருப்புசாமி, பகவதி

எல்லாக் கட்சிகளிலும் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என காங்கிரஸ் தலைமை நினைத்துவிட்டது போலிருக்கிறது. அதனால், ஒரே சமயத்தில் கோவையில் மூன்று மாவட்டத் தலைவர்களுக்கும் மொத்தமாக விடை கொடுத்திருக்கிறது. காரணம் ஒன்றும் புதிதல்ல... வழக்கமான கோஷ்டி அரசியல் தான்.

தமி​ழ​கத்​தில் காங்​கிரஸ் கொஞ்​சம் சத்​தாக இருக்​கும் மாவட்​டங்​களில் கோவை​யும் ஒன்​று. கோவை மாநகர், கோவை வடக்​கு, கோவை தெற்கு என கோவை மாவட்ட காங்​கிரஸ் மூன்று மாவட்​டங்​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. மாநகர் மாவட்​டத் தலை​வ​ராக வழக்​கறிஞர் கருப்​பு​சாமி​யும், வடக்கு மாவட்​டத் தலை​வ​ராக வி.எம்​.சி.மனோகரனும், தெற்கு மாவட்​டத் தலை​வ​ராக என்​.கே.பகவ​தி​யும் இருந்​தனர். இவர்​கள் மூவரை​யும் தான் அண்மையில் பொறுப்​பிலிருந்து விடு​வித்​திருக்​கிறது காங்​கிரஸ் தலை​மை.

இவர்​களுக்​குப் பதிலாக மாநகர் மாவட்​டத்​துக்கு பீளமேடு விஜயகு​மாரும் வடக்கு மாவட்​டத்​துக்கு பி.ஆர்​.ரங்​க​ராஜனும், தெற்கு மாவட்​டத்​துக்கு பி.சக்​திவேலும் தலை​வர்​களாக நியமிக்​கப் பட்​டுள்​ளனர். இந்​தத் தடாலடி நீக்​கம் குறித்து நம்​மிடம் பேசிய கோவை காங்​கிரஸார், “காங்​கிரஸ் கட்சி மாவட்​டத் தலை​வர் பதவி​யானது மூன்​றாண்டு கால பதவி​யாகும். இருந்​தா​லும் அதி​கபட்​சம் ஒரு​வர் தொடர்ச்​சி​யாக 6 ஆண்​டு​கள் வரைக்​கும் தலை​வ​ராக இருக்​கலாம்.

ஆனால், இப்​போது பதவி நீக்​கப்​பட்ட வடக்கு மாவட்​டத் தலை​வர் வி.எம்​.சி.மனோகரன் தனக்​குள்ள மேலிட செல்வாக்கைப் பயன்​படுத்தி 17 ஆண்​டு​களாக அந்​தப் பதவி​யில் ஒட்​டிக்​கொண்டு இருந்​தார். அதே​போல் மாநகர் மாவட்​டத் தலை​வர் கருப்புசாமியும் வடக்கு மாவட்​டத் தலை​வர் பகவ​தி​யும் நாலரை ஆண்​டு​களுக்​கும் மேலாக தலை​வர்​களாக நீடித்​தார்​கள்.

இப்​படி தொடர்ந்து இந்த மூவரே மாவட்​டத் தலை​வர் பதவி​களை தக்​க​வைத்​துக் கொண்​ட​தால் ஒட்​டுமொத்​த​மாக கோவை மாவட்ட காங்​கிரஸே தேக்​க நிலைக்​குப் போய்​விட்​டது. இவர்​களால் அடுத்​தகட்ட பொறுப்​பு​களுக்கு நியமிக்​கப்​பட்​ட​வர்​களும் கட்​சியை வளர்ப்​ப​தில் கவனம் செலுத்தாத​தால் காங்​கிரஸுக்​கான புதிய வாக்​காளர்​களின் வரு​கை​யும் கணிச​மாக குறைந்து போனது. அதேசம​யம், கட்​சியை வளர்ப்​ப​தில் கவனம் செலுத்​தாத இவர்​கள், ஒரு​வர் மீது ஒரு​வர் தலை​மைக்கு புகார் சொல்​லிக் கொண்டு தனி ஆவர்த்​தனங்​களை நடத்தி வந்​தனர்.

மாநகர் மாவட்​டத்​தில் மாவட்​டத் தலை​வர் கருப்​பு​சாமிக்கு எதி​ராக, எதிர் கோஷ்டி​யினர் போட்​டிக் கூட்​டங்​களை நடத்​திய வரலாறும் உண்​டு. நீக்கப்​பட்ட மூன்று மாவட்ட தலை​வர்​களும் தங்​களுக்​குள் ஒருங்​கிணைப்பு இல்​லாமல் ஆளுக்​கொரு திசை​யில் செயல்​பட்​ட​தால் கட்​சி​யினருக்​குள் ஒற்​றுமை இல்​லாமல் போனது. அதி​லும் மூவரில் ஒரு​வர், அகில இந்​தி​யப் பொறுப்​பாளர் ஒரு​வரை பிடித்து அவர் மூல​மாகத்​தான் பதவி பெற்றதாகச் சொல்​வார்​கள். இவரது பதவியை பறிக்​கப் போவ​தாக ரொம்ப நாட்​களாகவே பேச்சு இருந்​த​தால் அவரது பதவி நீக்​கம் கட்​சி​யினர் மத்தி​யில் பெரி​தாக அதிர்ச்​சியை ஏற்​படுத்​த​வில்​லை.

வடக்கு மாவட்​டத் தலை​வ​ருக்​கும் மாநகர் மாவட்ட நிர்​வாகி​களுக்​கும் ஆரம்​பத்​தி​லிருந்தே ஒத்​துப்​போக​வில்​லை. தெற்கு மாவட்ட தலை​வர் பகவதிக்​கும் மாநில தலை​வர் செல்​வப்பெருந்​தகைக்​கும் தொடக்​கத்​தி​லிருந்தே ஏழாம் பொருத்​த​மாக இருந்​தது. கட்​சி​யின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை முன்​னிலைப்​படுத்​திக் கொள்​வ​திலேயே கவன​மாக இருந்த பகவ​தி, கட்​சி​யைப் பற்றி கவலைப்​பட​வில்​லை.

இப்​படி மூன்று மாவட்​டத் தலை​வர்​களுமே முரண்​பட்டு நின்​ற​தால் ஒரு​வரை நீக்​கி​விட்டு மற்​றவர்​களை வைத்​திருந்​தால் தேவையற்ற பிரச்​சினை​களைக் கிளப்​பு​வார்​கள் என்​ப​தால் மூன்று பேரை​யும் மாவட்​டத் தலை​வர் பொறுப்​பிலிருந்து தூக்கி இருக்​கி​றார்​கள். புதி​தாக தலை​வர் பொறுப்​புக்கு வந்​திருப்​பவர்​கள் கடந்த கால நிகழ்​வு​களை எல்​லாம் சீர்​தூக்​கிப் பார்த்து கோவை காங்​கிரஸை கோமா​வில் இருந்து மீட்​டால் நல்​லது” என்​ற​னர்.

பதவி நீக்​கம் தொடர்​பாக வடக்கு மாவட்ட முன்​னாள் தலை​வர் வி.எம்​.சி.மனோகரனிடம் பேசினோம். “கட்சி தலைமை அறி​வித்த அனைத்து போராட்​டங்​களை​யும் பொதுக்​கூட்​டங்​களை​யும் ஆயிரக்கணக்​கில் கூட்​டத்​தைக் கூட்டி சிறப்​பாகவே நடத்தி முடித்​திருக்​கிறேன். கட்சி வளர்ச்சிக்காக என்​னாலான அனைத்து முயற்​சிகளை​யும் எடுத்​துள்​ளேன்.

இருந்​தா​லும் மாற்​றம் என்​பது வழக்​க​மானது தான். அதை ஏற்​றுக்​கொண்​டு, நான் வழக்​கம் போல கட்​சிப் பணி​களை தொய்​வின்றி தொடர்​கிறேன்” என்​றார் அவர். மாநகர் மாவட்ட முன்​னாள் தலை​வர் கருப்புசாமியோ, “இது வழக்​க​மான கட்​சி​யின் நடவடிக்கை தான். மற்​றபடி இதற்கு குறிப்​பிடும்​படி​யாக வேறெந்​தக் காரண​மும் இல்​லை” என்​றார்.

இதனிடையே, புதி​தாக மாநகர் மாவட்​டத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள பீளமேடு விஜயகு​மார் மீது அதற்​குள்​ளாகவே புகாரை கிள்​ளிப்​போட ஆரம்பித்​து​விட்​டார்​கள். 2022-ல் கோவை மாநக​ராட்சி தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தனது மனை​விக்கு சீட் இல்லை என்​றதும், திமுக-வுக்கு ஒதுக்கப்​பட்ட அந்த வார்​டில் தனது மனை​வியை சுயேச்​சை​யாக போட்​டி​யிட வைத்து கூட்​டணி தர்​மத்தை மீறி​னார் என்​பதே விஜயகு​மாருக்கு எதிராக காங்​கிரஸ் கட்​சி​யினர் சுடச் சுடக் கொளுத்​திப் போட்​டிருக்​கும் புகார்.

எத்​தனை பேர் வந்து புத்தி சொன்​னாலும் கோஷ்டி அரசி​யல் செய்​வ​தி​லும் ‘ஜன​நாயகரீ​தி​யில்’ செயல்​படும் காகிரஸாரை அத்​தனை எளி​தில் மாற்றிவிட முடியுமா என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x