Published : 11 Sep 2025 01:48 AM
Last Updated : 11 Sep 2025 01:48 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில் (ஏசி இல்லாத நீண்ட தூரம் செல்லும் ரயில்) தமிழகத்தில் ஈரோடு - பிஹாரில் ஜோக்பனி இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரயிலுக்கு இணையான வேகமும் பாதுகாப்பும் கொண்ட அம்ரித் பாரத் ரயில், 'புஸ் புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால் வந்தே பாரத்துக்கு இணையாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கும் வகையில் 12 முன்பதிவு பெட்டிகள் உள்பட 22 எல்.எச்.பி. பெட்டிகள் இருக்கும்.
‘சிசிடிவி’ கேமரா, பயணிகள் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புறத் தோற்றம், நவீன ஓட்டுநர் அறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. தற்போது, பிஹார் தர்பங்கா – உத்தரபிரதேசம் அயோத்தி தாம் வழியாக ஆனந்த் விஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலம் மால்டா – பெங்களூரு இடையே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் ரயில், ஈரோடில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பிஹார் மாநிலம் ஜோக்பனிக்கு இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த ரயில் ஈரோடு நிலையத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 7 மணிக்கும், ஜோக்பனியில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கும் புறப்படும்.இந்த ரயில் சேலம், காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பாட்னா, கதிஹார் வழியாக இயக்கப்பட உள்ளது. ஈரோடு, கதிஹாரில் பராமரிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “சாதாரண மற்றும் நடுத்தர பயணிகளை கவரும் வகையில், அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் போல் வேகமாக செல்லும் திறன் கொண்டது. ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இந்த புதிய ரயில் சேவையை வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT