Published : 08 Sep 2025 05:28 AM
Last Updated : 08 Sep 2025 05:28 AM
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.7) முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11 முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும், வரும் 10-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் 10 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் 9 செ.மீ. புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT