Published : 04 Sep 2025 05:20 AM
Last Updated : 04 Sep 2025 05:20 AM
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் பொன்முடி பதவியை இழந்தார். மேலும், பொன்முடிக்கு எதிராக 140-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸில் அளிக்கப்பட்டன. அத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும், பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், சைவம், வைணவம் மற்றும் பெண்களை தொடர்புபடுத்தி பொன்முடி பேசிய முழு வீடியோ தொகுப்பையும், அவர் மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படும் 1972-ம் ஆண்டுக்கான ஆதாரத்தையும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேசிய பேச்சின் முழு வீடியோ தொகுப்பையும், அவர் மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படும் 1972-ம் ஆண்டுக்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்தார். அதையடுத்து நீதிபதி, இந்த ஆவணங்களை பார்த்துவிட்டு வழக்கை விசாரிக்க விரும்புவதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT