Published : 03 Sep 2025 06:17 AM
Last Updated : 03 Sep 2025 06:17 AM

முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்: இலங்கை அதிபர் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

கச்சத்தீவில் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க.

ராமேசுவரம் / கடலூர்: கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்கை அதிபர் கூறி​யுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. இந்​திய அரசு கச்​சத்​தீவை இலங்​கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இலங்கை அதிபர் கச்​சத்​தீவுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

யாழ்ப்​பாணம் மண்டை தீவில் புதி​தாக சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க, பின்​னர் மண்​டைத்​தீவு, நயி​னாத் தீவு மற்றும் கச்​சத்​தீவு​களுக்​குச் சென்று பார்​வை​யிட்​டார்.

இது தொடர்​பாக இலங்கை அதிபர் மாளிகை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “அதிபர் அநுர குமார திசா​நாயக்க யாழ்ப்​பாணத்​தில் உள்ள கச்​சத்​தீவுக்கு கண்​காணிப்பு பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இலங்கை மீன்​வளத்​துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர், பொது​மக்​கள் பாது​காப்பு மற்​றும் நாடாளு​மன்ற விவ​கார அமைச்​சர் ஆனந்த விஜே​பால, வடக்கு கடற்​படை கட்​டளை தளபதி ரியர் அட்​மிரல் புத்​திக லியனகமகே ஆகியோர் உடனிருந்​தனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக, யாழ்ப்​பாணத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க “கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது” - என்று தெரி​வித்​திருந்​தார். கச்​சத்​தீவு விவ​காரம் தொடர்​பான இலங்கை அதிபரின் பேச்​சுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், தவாக தலை​வர் த.வேல்​முரு​கன் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை:

இரா.​முத்​தரசன்: இலங்கை அதிபரின் பேச்சு இரு​நாட்டு உறவுக்​கும் எதி​ரானது. தமிழக மீனவர்​கள் மீது இலங்கை கடற்​படை​யினரும், கடல் கொள்​ளை​யர்​களும் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரும் நிலை​யில், இலங்கை அதிபர் ‘இந்​திய மீனவர்​கள், இலங்கை கடல் பகு​திக்​குள் மீன் பிடித்து சிக்​கி​னால், அவர்​களை எளி​தாக விட மாட்​டோம். பிடிபடும் படகு​களை திருப்​பித் தர மாட்​டோம். அது இலங்​கைக்கே சொந்​த​மாகும்’ என்று கூறி​யிருப்​பதும் அதி​கார ஆணவத்​தின் உச்​ச​மாகும்.

தி.வேல்​முரு​கன்: கச்​சத்​தீவு விவ​காரத்​தில் இலங்கை அதிபரின் திமிர்ப்​பேச்சு தமிழக மீனவர்​களின் உரிமைக்​கும், மத்​திய அரசுக்கும், தமிழக அரசுக்​கும் நேரடி​யாகச் சவால்​விடும் அகந்தை மிகுந்​தப் பேச்​சாகும். கச்​சத்​தீவு தமிழர்​களின் உரிமை நிலம்.

இலங்கை அதிபரின் பேச்​சுக்கு மத்​திய அரசும், அமைச்​சர்​களும் மவுனம் சாதிப்​பது வரலாற்​றின் பெரும் துரோகம். எனவே, கச்​சத் தீவை மீட்​டெடுக்க சட்ட, அரசி​யல் நடவடிக்​கைகளை மத்​திய, மாநில அரசுகள் உடனடி​யாக தொடங்க வேண்​டும். இல்லாவிட்டால் மக்​களைத் திரட்​டி போ​ராட்​டங்​கள்​ நடத்​துவோம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x