Published : 02 Sep 2025 02:32 PM
Last Updated : 02 Sep 2025 02:32 PM

சென்னை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு: ஐகோர்ட் ரத்து

சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சியின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான ஜெய பிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி என்.மாலா விசாரித்தார். விசாரணையின் போது, பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு விரிவான பதில் அளித்தும், அவற்றை பரிசீலிக்காமல், எந்த காரணத்தையும் தெரிவிக்காமல், விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், இவர்களை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுகளை நியாயப்படுத்தி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நோட்டீஸ்களுக்கு கவுன்சிலர்கள் அளித்த பதிலை, எந்தக் காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை எனக் கூறி, நான்கு பேரையும் பதவி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், அவர்களின் பதிலை பரிசீலித்து, விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, சட்டப்படி நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x