Published : 02 Sep 2025 07:05 AM
Last Updated : 02 Sep 2025 07:05 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி இறந்த அஜித்குமாரின் தாயார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணையை முடித்து ஆக. 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி ஆக.20-ல் ஆன்லைன் வழியாக குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தனிப்படை வேன் ஓட்டுநர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்ப தாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக சிபிஐக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் அஜித்குமார் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப்பத்திரிகையை நீதிபதி திரும்ப அனுப்பியுள்ளார். அதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அந்த குறைபாடுகளை சரிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் சிபிஐ-க்கு நீதிபதி செல்வபாண்டி உத்தர விட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT