Published : 31 Aug 2025 02:42 PM
Last Updated : 31 Aug 2025 02:42 PM
சென்னை: பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
வழக்கமாக புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி பணியிடம் காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கும். அதில், 3 பேர் பட்டியலை ஆணையம் தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பும். அதில், ஒருவரை தமிழக அரசு புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் இன்றுடன் (31-ம் தேதி) ஓய்வு பெறுவது உறுதி ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் இருந்த வெங்கடராமனை தமிழக அரசு நியமிக்க முடிவு செய்தது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்கடராமன் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1968-ல் பிறந்த இவர், 1994-ல் ஐபிஎஸ் ஆக தேர்வாகி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். குறிப்பாக முக்கியம் வாய்ந்த சிபிசிஐடி தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவிகளில் பணியாற்றி அரசின் பாராட்டை பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT