Published : 31 Aug 2025 10:30 AM
Last Updated : 31 Aug 2025 10:30 AM
சென்னை: தமிழகத்தில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62,752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, 32 லட்சத்து 81,032 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10 சதவீதம் கூட நடைமுறைக்கு வராத நிலையில் முதல்வர் கூறுவது பச்சை பொய். கோயபல்ஸ் கொள்கையை கடைபிடித்து பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித்தான் பொய்யுரைத்து வந்தது. தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77 சதவீதம், 80 சதவீதம், 100 சதவீதம் என்று கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை ஆதாரங்களுடன் பாமக அம்பலப்படுத்தும்.
தமிழகத்துக்கு வந்த முதலீட்டு விவரங்கள் குறித்து திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால், வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிரூபிக்கலாமே. ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும்தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகு விரைவில் அம்பல மாகும். அப்போது திமுக அரசை ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT