Published : 30 Aug 2025 06:11 PM
Last Updated : 30 Aug 2025 06:11 PM
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாவட்ட ஆட்சியர், வன அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டம், மசினகுடி உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக சத்தத்தை எழுப்பக் கூடிய, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாக, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சி.மோகன், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் ஆகியோர் புகார் தெரிவித்தனர்.
இது வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் விலங்குகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டனர். இதை கேட்ட நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ரிசார்ட்கள் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது மிகவும் கொடூரமானது என்றனர்.
இரவு நேரங்களில், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளால் பயன்படுத்துவது, வன விலங்குகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என்பதால், தங்கும் விடுதிகளில் என்ன மாதிரியான ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர், வன அதிகாரி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT