Published : 30 Aug 2025 06:05 AM
Last Updated : 30 Aug 2025 06:05 AM
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பொன்விழா ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று (ஆக.29) தொடங்கியது. செப். 8-ம் தேதி வரை இத்திருவிழா நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் நடைபயணமாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்களை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். கூட்ட நெரிசலைப் பொருத்து நாளை (ஆக.31) மற்றும் செப்.1, 7, 8 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:திரு.வி.க. பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக எல்.பி.சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்படும். 7-வது அவென்யு மற்றும் எம்.ஜி.சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்.பி. சாலை இடது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையில் இடது பக்கம் திரும்பி, பின்னர் எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகர் 1-வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பெசன்ட் நகர் 1-வது அவென்யு, சாஸ்திரி நகர் 1-வது அவென்யு வழியாகத் திருப்பிவிடப்பட்டு, பின்னர் இடதுபுறம் சாஸ்திரி நகர் 1-வது மெயின் ரோடு வழியாக சென்று, பின்னர் வலதுபுறம் திரும்பி எம்.ஜி.சாலை வழியாக எல்.பி. சாலையை அடைந்து தங்கள் இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT