Published : 30 Aug 2025 05:31 AM
Last Updated : 30 Aug 2025 05:31 AM
சென்னை: அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் அடிப்படை விதிகளைத் திருத்தம் செய்ததை எதிர்த்தும், உள்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதி கோரி வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், “முக பொதுச்செயலாளராகப் பதவி வகித்த ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும், அதன்பிறகு இடைக்கால பொதுச்செயலாளர், பின்னர்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதும் கட்சியின் அடிப்படை விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் எதிரானது’’ என கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டதற்கு எதிராக உரிமையியல் வழக்குத்தொடர இருவருக்கும் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே நடந்தது.
அப்போது பழனிசாமி தரப்பில், “அதிமுகவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள ராம்குமார் ஆதித்தனும், சுரேன் பழனிசாமியும் அதிமுக உறுப்பினர்களே கிடையாது. எனவே இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இதற்கு ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி தரப்பில், ‘‘நாங்கள் அதிமுகவின் உறுப்பினர்கள் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்த பிறகே அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடரதனி நீதிபதி அனுமதியளித்தார்.
எனவே பழனிசாமிதாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.
இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், “பழனிசாமி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு ஏற்புடையது என்பதால் அதிமுகவின் விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் வழக்குத் தொடர ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோருக்குஅனுமதியளித்து தனி நீதிபதபிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் மனுதாரர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர தடை இல்லை’’ என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT