Published : 27 Aug 2025 10:51 AM
Last Updated : 27 Aug 2025 10:51 AM
பாமக-வையும் காடுவெட்டி குருவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. குரு மறைவுக்குப் பிறகு பாமக-வை விட்டு ஒதுக்கப்பட்ட அவரது குடும்பம் தனியாக செயல்பட்டு வருகிறது. இப்போது பாமகவே ரெண்டுபட்டுக் கிடக்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மனோஜ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த மினி பேட்டி இது.
பாமக-வின் இன்றைய நிலை குறித்து..?
மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் வெறுப்பு பாமக மீது இல்லை. அன்புமணி மீதுதான். எங்கள் அப்பா அரும்பாடு பட்டு வளர்த்த கட்சி அது. அவரை புறக்கணித்ததோடு, அவருடைய சாவுக்கும் காரணமாக இருந்ததால் கோபம் இருந்தது. ஆனால் அதற்காக, கட்சி அழிவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
அப்பா, மகன் மோதலை எப்படி பார்க்கிறீர்கள்?
இது ஒரு நாடகம் தான். தொடர்ந்து தோல்வி முகத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற பாமக-வுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காக இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். பாட்டிலால் தாயை அடித்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தாயின் பிறந்த நாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதை நாம் எப்படி பார்ப்பது? இப்படி நாடகம் போட்டுவிட்டு தேர்தல் நேரத்தில் பெட்டி வாங்கும் விஷயத்தைப் பொறுத்து இருவரும் இணைந்துவிடுவார்கள். அவர்கள் வன்னிய மக்களுக்காக செயல்படவில்லை. ஓட்டுக்காகவும் நோட்டுக்காகவும் தான் செயல்படுகிறார்கள்.
இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
தனியாக பிரிந்து நின்றால் பாமக அழிந்துவிடும் என்பது இருவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல், ஐயா இருந்தால் தான் உங்களுடன் கூட்டணி, ஐயா வராமல் நான் யாருடனும் பேச மாட்டேன் என்று எடப்பாடியார் சொல்லிவிட்டார். தேர்தல் ஆணையம் வேண்டுமானால் அன்புமணிக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் தேர்தல் வந்து அன்புமணி போய் ஓட்டு கேட்டால் அவருக்காக யாரும் ஓட்டு போட மாட்டார்கள். அதனால் இருவரும் ஒன்று சேர்ந்துதான் ஆகவேண்டும்.
இருவரில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?
அப்படி ஒரு நிலை என்றால் அன்புமணியை நீக்கும் ஐயாவின் முடிவை ஆதரிப்போம். ஐயாவின் உழைப்பு, அவரது எண்ணம் ஆகியவற்றால் தான் வன்னியர் சங்கம், பாமக ஆகியவை உருவானது. வன்னியர்கள் அனைவருமே பாமகவுக்காக உழைத்திருக்கிறார்கள். அன்புமணி வன்னியர்களுக்காகவும் பாமக-வுக்காகவும் எதையும் செய்ததில்லை. அன்புமணியை நிரந்தரமாக நீக்குங்கள் என்று தான் ஐயாவிடம் கேட்கிறோம்.
உங்களின் திமுக ஆதரவு நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்?
வன்னியர்களுக்காக 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை திமுக தான் நடைமுறைப்படுத்தியது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி குண்டடிபட்டு இறந்த தியாகிகளுக்கு ஓய்வூதியம் தந்திருக்கிறது, நினைவு மண்டபம் அமைத்திருக்கிறது. மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு தருவதாக சொல்லி இருக்கிறார்கள். இப்போதைய நிலையில் திமுக தான் வன்னியர்களுக்கு அதிகம் செய்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை கொடுத்ததும் கலைஞர் ஐயாதான். அதிமுக எதையும் செய்யவில்லை.
10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அதிமுக தானே அறிவித்தது?
தேர்தலுக்காக, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெறுமனே அறிவித்துவிட்டு போய்விட்டார்கள். அதை திமுக அரசு வந்து தான் செயல்படுத்தியது. நீதிமன்றத்தின் மூலம் அது ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அதை மீண்டும் சரி செய்ய வேண்டும் என்று திமுக-வை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
வன்னிய மக்களை நீங்கள் உங்கள் அணியில் ஒருமுகமாக திரட்டும் யோசனை ஏதும் வைத்திருக்கிறீர்களா?
ஆம், நாங்கள் 25 தியாகிகளின் குடும்பங்களை ஒருங்கிணைத்து தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கிறோம். வரும் தேர்தலில் எங்கள் கட்சியும் போட்டியிடும். டெல்லியில் அதற்கான வேலைகளை செய்துவிட்டோம். இத்தனை நாளும் நாங்கள் அமைப்பாக ஒன்று சேராமல் தனித் தனி மனிதர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தோம். இனி, எனது சகோதரர் கனல் அரசன் உட்பட எனது அப்பாவை நேசித்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படப் போகிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT