Published : 27 Aug 2025 07:07 AM
Last Updated : 27 Aug 2025 07:07 AM

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்

சென்னை: விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்​கப்​பட்டு பூஜைகள் நடை​பெறுகின்​றன. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்​னணி உள்பட 65-க்​கும் மேற்​பட்ட இந்து அமைப்​பு​கள் மற்​றும் குடி​யிருப்​பு​வாசிகள், இளைஞர் அமைப்​பினர் என பல்​வேறு தரப்​பினர் பிரம்​மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட போலீ​ஸாரிடம் அனு​மதி கோரி​யிருந்​தனர்.

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் சுமார் 35,000 சிலைகளை வைத்து வழிபட போலீ​ஸார் அனு​மதி வழங்​கினர். சென்​னையைப் பொறுத்​தவரை 1,500 சிலைகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, விநாயகர் சிலைகள் நிறு​வுமிடத்​தின் நில உரிமை​யாளர்​கள், சம்​பந்​தப்​பட்ட உள்​ளாட்சி அமைப்​பு​கள், நெடுஞ்​சாலைத்​துறை அல்​லது அரசுத் துறை​யிட​மிருந்து அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும். தீயணைப்​புத்​துறை, மின்​வாரி​யம், ஆகிய​வற்​றிட​மிருந்து தடை​யில்லா சான்​றுகள் பெற்​றிருக்க வேண்​டும்.

நிறு​வப்​படும் சிலை​யின் உயர​மானது 10 அடிக்கு மேல் இருக்​கக்​கூ​டாது, பிற வழி​பாட்​டுத் தலங்​கள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றின் அரு​கில் சிலைகள் நிறு​வப்​படு​வதை தவிர்க்க வேண்​டும், மதவாத வெறுப்​புணர்​வைத் தூண்​டும் வகை​யிலோ, பிற மதத்​தினரின் உணர்​வு​களைப் புண்​படுத்​தும் வகை​யிலோ முழக்​கமிடு​வதற்​கும், கோஷமிடு​வதற்​கும் எவ்​விதத்​தி​லும் இடம் தரக்​கூ​டாது என கூறப்​பட்​டிருந்​தது.

இதையடுத்​து, நேற்று இரவில் 35,000 சிலைகளும் நிறு​வப்​பட்​டன. அனைத்து சிலைகளுக்​கும் தலா ஒரு போலீ​ஸார் வீதம் பாது​காப்பு வழங்​கப்​பட்​டது. இந்த சிலைகளுக்கு தின​மும் பூஜைகள் செய்​யப்​பட்டு வரும் 30, 31-ம் தேதி​களில் (சனி, ஞாயிறு) ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்டு கடல் மற்​றும் நீர் நிலைகளில் கரைக்​கப்பட உள்​ளது.

சென்​னை​யில், பட்​டினப்​பாக்​கம் சீனி​வாச நகர், பால​வாக்​கம் பல்​கலை நகர், காசிமேடு மீன்​பிடி துறை​முகம், திரு​வொற்​றியூர் பாப்​புலர் எடைமேடை பின்​புறம் என 4 இடங்​களில் சிலைகளை கரைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, விநாயகர் சதுர்த்தி பாது​காப்பு பணி​யில் சென்​னை​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் உட்​பட, தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக உளவுப் பிரிவு போலீ​ஸார் ரகசிய கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர். சிலைகளுக்​கு இன்​று​ முதல்​ பூஜைகள்​ நடை​பெற உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x