Published : 25 Aug 2025 12:59 AM
Last Updated : 25 Aug 2025 12:59 AM

​​​​​​​ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி: வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன் என உறுதி

சென்னையில் நேற்று நடந்த நிகழ்வில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டியை வரவேற்று நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் சுதர்​சன் ரெட்டி தமிழகம் வந்து முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட திமுக கூட்​டணி கட்சி தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு கோரி​னார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் தனது பதவியை ராஜி​னாமா செய்​ததை தொடர்ந்​து, அந்த ​ப​தவிக்கு செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாள​ராக தமிழகத்தை சேர்ந்​தவ​ரான மகா​ராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நிறுத்​தப்​பட்​டுள்​ளார். எதிர்க்​கட்​சிகள் அடங்​கிய இண்​டியா கூட்​டணி சார்​பில், தெலங்​கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி போட்​டி​யிடு​கிறார்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள திமுக கூட்​டணி கட்​சித் தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு கோரும் வித​மாக சுதர்​சன் ரெட்டி நேற்று சென்னை வந்​தார். முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் அவரை வரவேற்​றார். இதை தொடர்ந்​து, கூட்​டணி கட்சி தலை​வர்​களிடம் ஆதரவு கோரும் நிகழ்வு நடை​பெற்​றது. இதில், சுதர்​சன் ரெட்​டியை அறி​முகம் செய்து வைத்​து, ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இண்​டியா கூட்​டணி வேட்​பாளர் சுதர்​சன் ரெட்​டி, தமிழகத்​துக்​கும், தமிழக உணர்​வு​களுக்​கும் மதிப்​பளிக்​கக் கூடிய​வர். ஆனால், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​யான அவரை நக்​சல் ஆதர​வாளர் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் விமர்​சிக்​கிறார். அவர்​களால் தீவிர​வாதத்தை ஒழிக்க முடிய​வில்​லை. அந்த திறனற்ற நிலையை மறைக்க, நீதிப​தி​மேல் பழி​போட்டு தப்​பிக்க பார்க்​கிறார்.

அரசி​யல் எதிரி​களை பழி​வாங்க புல​னாய்வு அமைப்​பு​களை மத்​திய பாஜக அரசு பயன்​படுத்​துகிறது. தன்​னாட்சி அமைப்​பு​களை பாஜக​வின் துணை அமைப்​பு​களாக மாற்றி வரு​கிறது. அரசி​யலமைப்பு சட்​டமே ஆபத்​தில் சிக்​கி​யுள்​ளது. இந்த சூழலில், இந்​தி​யா​வின் அடிப்​படை கொள்​கைகளான மதச்​சார்​பின்​மை, கூட்​டாட்சி தத்​து​வம், சமூகநீ​தி,வேற்​றுமை​யில் ஒற்​றுமை ஆகிய​வற்​றில் நம்​பிக்கை கொண்ட ஒரு​வர் நமக்கு கிடைத்​திருக்​கிறார். அவரை ஆதரிப்​பது​தான் நம் முன்​னால் இருக்​கும் கடமை. ஆனால், பாஜகவோ, தமிழகத்​துக்​கும், தமிழக மக்​களுக்​கும் எதி​ராகவே அனைத்து செயல்​களை​யும் செய்​து​விட்​டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்​கிறது. இதெல்​லாம் பழைய தந்​திரம்.

எனவே, சட்ட நீதிக்​காக​வும், மனித உரிமை​களுக்​காக​வும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்​கிய நீதிபதி சுதர்​சன்ரெட்டி நமது இந்​திய ஜனநாயகம், நாடாளு​மன்ற மரபு​கள், மக்​களாட்​சி, அரசி​யலமைப்பு ஆகிய​வற்றை காக்க குடியரசுத் துணைத் தலை​வ​ராக வெற்றி பெற்று வரவேண்​டும் என்று வாழ்த்​துகிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

பின்​னர், ஆதரவு கோரி சுதர்​சன் ரெட்டி பேசி​ய​தாவது: திரா​விட இயக்க பாரம்​பரி​யம் செழித்த தமிழகத்​தில் பெருந்​தலை​வர் காம​ராஜர், தந்தை பெரி​யார், பேரறிஞர் அண்​ணா, கருணாநிதி உள்​ளிட்ட சிறந்த ஆளு​மை​கள் வாழ்ந்​துள்​ளனர். அவர்​களது வழி​யில் மாநில உரிமைக்​காக முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து போராடி வரு​கிறார். விளிம்​புநிலை மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக பல திட்​டங்​களை செயல்​படுத்தி வருகிறார். கல்வி, சுகாதாரம், புத்​தாக்க சிந்​தனை, தொலைநோக்கு பார்வையில் முன்னணி மாநில​மாக தமிழகம் உள்​ளது. இந்​தியா என்​பது ஒரு நாடு​தான். ஆனால், மாநிலங்​கள் இல்​லாமல் இந்​தியா இல்​லை. நீதிப​தி​யாக இருந்​த​போது அரசி​யலமைப்பை நிலைநிறுத்​திக் கொண்​டிருந்​தேன். இப்​போது, அரசி​யலமைப்பை காக்க குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளேன். நான் வெற்றி பெற்​றால், அரசி​யலமைப்பு சட்​டத்தை முழு​மூச்​சுடன் பாது​காப்​பேன் என்று உறு​தி​யளிக்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர் சந்​திப்​பில் பேசிய சுதர்​சன் ரெட்​டி, ‘‘தமிழகத்தை சேர்ந்த முன்​னாள் குடியரசுத் தலை​வர்​கள் ராதாகிருஷ்ணன், அப்​துல் கலாம் ஆகியோரைப் போல நான் அரசி​யலுக்கு அப்​பாற்​பட்டு போட்​டி​யிடு​கிறேன். அனைத்து கட்சி எம்​.பி.க்​களிட​மும் ஆதரவு கோரு​வேன்’’ என்​றார்.

இந்த நிகழ்ச்​சி​யில் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, விசிக தலை​வர் திரு​மாவளவன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் எம்​.பி. செல்​வ​ராஜ், தி​முக எம்​.பி.க்​கள் திருச்​சி சிவா, கனி​மொழி, கர்​நாடக காங்​கிரஸ்​ எம்​.பி. சையத்​ நசீர்​ உசேன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x