Published : 24 Aug 2025 12:57 PM
Last Updated : 24 Aug 2025 12:57 PM
சென்னை: கரூரில் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி, கரூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரியார் விருது, கழக துணைப் பொதுச்செயலாளரும் கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கும், அண்ணா விருது, தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப.சீத்தாராமனுக்கும் வழங்கப்படும்.
கலைஞர் விருது, நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் விருது, கழக மூத்த முன்னோடியும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கும் வழங்கப்படும்.
பேராசிரியர் விருது, கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் ராமலிங்கத்துக்கும், மு.க.ஸ்டாலின் விருது, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT