Published : 24 Aug 2025 12:08 AM
Last Updated : 24 Aug 2025 12:08 AM
சென்னை: ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு வழிவகுக்கும் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்திரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சொத்துவரியை உயர்த்த வேண்டும். ஆனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 264 (2)-ல் 2023-ம் ஆண்டு திருத்தம் செய்து, தமிழகம் முழுவதும் சொத்துவரி ஆண்டுக்கு 6 சதவீதம் தானாக உயர்த்தப்படும் என்று 2024-ம் ஆண்டு செப்.5-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரியை உயர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்துள்ள அரசாணை சட்டவிரோதமானது.
வரியை உயர்த்துவதற்கு முன், அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டவிரோதமாகும். எனவே, 6 சதவீத சொத்துவரியை தானாக உயர்த்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு அரசு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT