Published : 20 Aug 2025 05:35 AM
Last Updated : 20 Aug 2025 05:35 AM
வேலூர்/சென்னை: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார வாகனம் வந்து நின்றதும் அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சைரன் ஒலித்தபடி கடந்து சென்றது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் பார்த்து கூச்சலிட்டனர்.
இதனால், அதிருப்தி அடைந்த பழனிசாமி, “என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை தொடர்ச்சியா அனுப்பி மக்களை சிரமப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்கிறது. இதனால் மக்களுக்கு ஏதாவது ஒன்றானால் யார் பொறுப்பு. நானும் 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன் இதேபோலத்தான் செய்கிறார்கள். நேருக்கு நேர் எதிர்க்க முடியாதவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநரின் பெயரையும் குறித்து வைத்து காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார்” என்றார். தொடர்ந்து, பேசிய அவர், “இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசுதான்.
அதிமுக ஆட்சியில்தான் அதிகளவு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. நாட்டிலேயே அதிக உயர்கல்வி படிப்போர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற சாதனையை உருவாக்கியது அதிமுக ஆட்சி” என்றார்.
‘108’ நிர்வாகம் விளக்கம்: இதற்கிடையே ‘108’ ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் வயிறு உபாதை பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டிருந்த ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டியை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்காக, 108 ஆம்புலன்ஸுக்கு இரவு 9.45 மணிக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் இரவு 10.20 மணியளவில் அதிமுக பிரச்சார கூட்டத்தை கடந்து சென்றபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர், நோயாளி சந்திராவை, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு 12.30 மணியளவில் ஓட்டுநர் சுரேந்தர் அனுமதித்துள்ளார். கூட்டத்தை கவனிக்காமல் ஓட்டுநர் சுரேந்தர் வந்துள்ளார். ஆம்புலன்ஸ் வாகனத்தை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பக்கத்து தெரு வழியாக செல்ல அறிவுறுத்தினர்.
அப்படி செல்லும்போது பிரச்சார வாகனத்தை நெருங்கிய படி சென்றபோது பிரச்சினை ஏற்பட்டு ஓட்டுநரை அடிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தால் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் சுரேந்தரை போலீஸார் சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்திருந்தனர். அதன் பிறகே நோயாளியை அழைத்துச்செல்ல அனுமதித்தனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சர் கருத்து: இதுதொடர்பாக சென்னையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, எங்கு சென்றாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக பழனிசாமி சொல்கிறார். எங்கேயாவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சென்று உயிர்களை காக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வரும் வழியில் இவர் கூட்டத்தை கூட்டிவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுவதாக சொல்கிறார். மருத்துவ பணியாளரை ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுவது போல் பேசுவது அநாகரிகமாகும். அவர் இத்துடன் இதனை நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT