Published : 18 Aug 2025 04:50 PM
Last Updated : 18 Aug 2025 04:50 PM
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி (நாளை) முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை (ஆக.19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கொங்கன் – வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு – தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 14 செ.மீ மழை, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை, கோவை மாவட்டம் சோலையார், நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட்டில் தலா 8 செ.மீ மழை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, பார்வூட், கிளன்மார்கன், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT