Last Updated : 18 Aug, 2025 08:21 AM

1  

Published : 18 Aug 2025 08:21 AM
Last Updated : 18 Aug 2025 08:21 AM

காரில் இடமில்லை... கருத்துச் சொல்ல அனுமதியில்லை..! - சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறாரா இபிஎஸ்?

அன்வர் ராஜா, மைத்ரேயன் என அதிமுக முக்கிய தலைகள் எல்லாம் அந்தக் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இரண்டாம்கட்ட தலைவர்களை வளரவிடாமல் தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என இபிஎஸ்ஸுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.

பணி​வான​வர், விசு​வாச​மான​வர் என்​ப​தால் தான் சிறை செல்​லும் முன்​பாக இபிஎஸ்ஸை முதல்​வர் இருக்​கை​யில் அமர்த்​தி​விட்​டுச் சென்​றார் சசிகலா. ஆனால் அவரிடம் அநி​யா​யத்​துக்கு பணிவு​காட்டி பதவிக்கு வந்த பழனி​சாமி, அடுத்த சில நாட்​களி​லேயே தனது இன்​னொரு முகத்​தை​யும் காட்ட ஆரம்​பித்​தார்.

சீக்​கிரமே அதி​கார அரசி​யலைப் படித்த இபிஎஸ், தனக்கு வாழ்​வழித்த சசிகலா​வை​யும் அவரது அதி​கார மைய​மாக இருந்த தினகரனை​யும் கொஞ்​ச​மும் யோசிக்​காமல் கட்​சி​யை​விட்டு தூக்கி எறிந்​தார். அடுத்​து, தனக்கு அடுத்த நிலை​யில் இருந்த ஓபிஎஸ்​ஸுக்​கும் கொஞ்​சம் கொஞ்​ச​மாக நெருக்​கடி கொடுத்து அவரை​யும் அவரைச் சார்ந்​தவர்​களை​யும் அதி​முக-வை விட்டு துரத்​தி​னார்.

இப்​படி, தனது தலை​மைக்கு போட்​டி​யாக வரு​வார்​கள் என சந்​தேகப்​பட்ட தலை​களை எல்​லாம் கட்​சியி​லிருந்து களை எடுத்த இபிஎஸ், எதிர்​காலத்​தி​லும் தனது தலை​மைக்கு போட்​டி​யாக யாரும் வந்​து​விடக் கூடாது என்​ப​தி​லும் மிகக் கவன​மாக காய் நகர்த்​து​வ​தாகச் சொல்​கி​றார்​கள். ஒரு காலத்​தில் ஜெயலலிதா எப்​படி கட்​சி​யின் ஒற்றை முக​மாக இருந்​தாரோ அதே​போல் இப்​போது இபிஎஸ் தன்னை மட்​டுமே முன்​னிலைப்​படுத்தி வரு​வதுடன், இரண்​டாம் கட்ட தலை​வர்​களை தட்​டிவைப்​ப​தி​லும் உஷா​ராக இருக்​கி​றா​ராம்.

எம்​ஜிஆர் காலத்து அரசி​யல்​வாதி என்​ப​தால் செங்​கோட்​டையன் மீது மதிப்​பும் மரி​யாதை​யும் வைத்​திருந்​தார் இபிஎஸ். ஆனால் இடை​யில், ‘அடுத்த முதல்​வர் வேட்​பாள​ராக செங்​கோட்​டையன் வரலாம்’ என்ற செய்​தி​கள் கசிய ஆரம்​பித்​ததும் விழித்​துக் கொண்ட இபிஎஸ் தரப்​பு, செங்​கோட்​டையனை மெல்ல ஓரங்​கட்ட ஆரம்​பித்​தது. இபிஎஸ் முதல்​வ​ராக இருந்த போது அவருக்​கான ‘டெல்லி மூவ்​’களை தங்​கமணி​யும் வேலுமணி​யும் தான் முன்​னின்று கவனித்​துக் கொண்​டார்​கள்.

ஆனால், ஆட்சி மாறியதும் அவர்​கள் விஷ​யத்​தி​லும் அலார்ட் ஆனார் இபிஎஸ். வேலுமணி டெல்லி பிணைப்​பில் இருப்​ப​தால் அவரை இபிஎஸ்​ஸால் விலக்​கிவைக்க முடிய​வில்​லை. ஆனால், உறவுக்​கார​ராக இருந்​தும் தங்​கமணியை தள்​ளிவைக்க ஆரம்​பித்​தார். அண்​மை​யில் இதைத் தெரிந்து கொண்டு தங்​கமணி தரப்​புக்​கும் வலை வீசிப் பார்த்​தது திமுக தரப்​பு.

தம்பிதுரை , செல்லூர் ராஜூ, காசிநாத பாரதி

இவர்​களைப் போலவே தான் செல்​லூர் ராஜூ​வும் இபிஎஸ்​ஸின் தீவிர விசு​வாசி​யாக இருக்​கி​றார். ஆனால், அப்​படிப்​பட்​ட​வரை​யும் அண்​மை​யில் தென் மாவட்ட சுற்​றுப்​பயணத்​தின் போது இபிஎஸ் தனது காரில் ஏறவி​டா​மல் தடுத்து அவமானப்​படுத்​தி​விட்​ட​தாக ஆதங்​கப்​பட்​டிருக்​கி​றார் ஓபிஎஸ். மதுரை​யில் தன் வீட்​டுப் பணம் ‘லம்​பாக’ கொள்ளை போன விவ​காரத்​தில் உதவி கேட்டு மாவட்ட அமைச்​சர் உள்​ளிட்ட திமுக தலை​களிடம் பேசி​னார் என்​ப​தால் செல்​லூ​ரார் மீது இபிஎஸ்​ஸுக்கு வருத்​தம் என்​கி​றார்​கள்.

இதே​போல் கடந்த 13-ம் தேதி செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில், தனதரு​கில் இருந்த எம்பி-யான தம்​பிதுரை, பதில் சொல்ல முற்​பட்ட போது இபிஎஸ் அவரது கையில் வேக​மாக தட்டி தடுத்​ததும் இப்​போது விவாத​மாகி இருக்​கிறது.

செல்​லூர் ராஜு மற்​றும் தம்​பிதுரைக்கு நேர்ந்த அனுபவத்தை அறிக்​கை​யில் சுட்​டிக்​காட்டி இருக்​கும் ஓபிஎஸ், ‘அறி​வு, அனுபவம், மேலாண்மை திறன், மனிதர்​களை மதித்து நடந்​து​கொள்​ளும் பண்பு இது நான்​கும் சேர்ந்​தது தான் தலை​மைப் பண்​பு. ஆனால், அதற்​கான அறிகுறிகள் சிறிதும் இல்​லாத பழனி​சாமி​யிடம் அதி​முக சிக்​கிக்​கொண்டு விட்​டது’ என ஆதங்​கப்​பட்​டிருக்​கி​றார்.

இதுகுறித்து அதி​முக செய்​தித்​தொடர்​பாள​ரான காசி​நாத பார​தி​யிடம் பேசினோம். “அதி​முக-வுக்கு எடப்​பாடி​யார் தலை​வ​ராக வந்த பிறகு தான் மிகப்​பெரிய எழுச்சி ஏற்​பட்​டிருக்​கிறது. அப்​படி இருக்​கை​யில், கட்​சி​யைக் கெடுத்​து​விட்​டார், கட்​சியை அழித்​து​விட்​டார் என்​றெல்​லாம் அவருக்கு எதி​ராக குறை சொல்​ல​முடி​யாதவர்​கள், இரண்​டாம்​கட்ட தலை​வர்​களை அவம​திக்​கி​றார், அவர்​களை வளர​வி​டா​மல் தடுக்​கி​றார் என்​றெல்​லாம் அபாண்​ட​மாய் பழி​போடு​கி​றார்​கள்.

இதை எல்​லாம் பொய்​யாக்கி 2026 தேர்​தலில் வெற்றி பெற்று முதல்​வ​ராக அமர்ந்து அம்​மாவை விட பெரிய அம்​மா​வாக இபிஎஸ் திகழப்​போவதை இந்த நாடு பார்க்​கத்​தான் போகிறது” என்​றார் அவர்.

அதி​முக செய்​தித் தொடர்​புச் செய​லா​ளர் வைகைச் செல்​வனோ, “கட்​சி​யின் இரண்​டாம் கட்ட தலை​வர்​கள் முதல் அடிமட்ட தொண்​டர்​கள் வரை அனை​வ​ருக்​கும் உரிய மரி​யாதையை​யும், அவர​வர்​களுக்கு உரிய இடத்​தை​யும் எடப்​பாடி​யார் கொடுக்க தவறு​வ​தில்​லை” என்று அழுத்​த​மாகவே சொன்​னார். அவமானப்​படுத்​தப்​பட்​ட​தாகச் சொல்​லப்​படும் தம்​பிதுரை​யும் செல்​லூர் ராஜூ​வும் இதை ஏற்​றுக் கொண்​டால் சரி​தான்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x